

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக போலீஸ் அதிகாரி ஒருவர் ஹெலிகாப்டரை கடத்திச் சென்று நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதலை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறியுள்ளார்.
வெனிசுலாவில் செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களில் காவல் துறையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் வட்டமடித்து நீதிமன்ற மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலை வெனிசுலா காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் நிகழ்த்தியுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அதிபர் நிக்கோலஸ், "இந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெனிசுலா அரசு அறிக்கையில், ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்திய நபர் காவல் அதிகாரி ஆஸ்கர் பெரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரஸ் அதிபருக்கு எதிராக புரட்சியாளராக மாறியுள்ளதாக அவரது இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அருகில் துப்பாக்கிய ஏந்திய நபர்கள் நிற்கின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுராவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளும், புரட்சியாளர்களும் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் தன் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்யப்படும் சதி எனக் கூறி வரும் அதிபர் மதுரோ, ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்க முயன்று வருகிறார்.