

வடகொரியா நடத்திய புதிய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட தகவலில், "நடுத்தரமான நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியாவால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த புதிய ஏவுகணையானது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது. மேலும், இந்த ஏவுகணைக்காக புதிய திட எரிபொருள் பயன்படுத்தப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு வடகொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில், "உலகின் அசைக்க முடியாத சக்தியாக வடகொரியா உருவெடுத்துள்ளது. எனினும் வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க ராணுவம் செயல்படுகிறது. தென்கொரியாவில் தொடர்ந்து போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. எனவே நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணுஆயுத பலம் மேலும் அதிகரிக்கப்படும்" என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் தெரிவித்திருந்தார்.
வடகொரியா கடந்த ஆண்டு இறுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது.
இதற்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. வடகொரியா மீது ஐ.நா.சபை சார்பில் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வடகொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.