Published : 03 Jan 2014 01:36 PM
Last Updated : 03 Jan 2014 01:36 PM

சோமாலியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

சோமாலியாவில் புத்தாண்டு நாளான புதன்கிழமை நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில், சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ஜஸீரா என்ற ஹோட்டலுக்கு வெளியில் புதன்கிழமை இரண்டு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதுதவிர நகரின் பல்வேறு இடங்களில் சோமாலிய அரசுப் படை மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவங் களில் 10 இறந்ததாக நேற்று முன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை நேற்று 11 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் எண் ணிக்கை 18 ஆக உள்ளது. இறந்தவர்களில் இருவர் பாது காப்பு படையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. ஜனவரி முதல் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என பொது மக்களையும், உள்ளூர் ஹோட்டல்களையும் இந்த அமைப்பு எச்சரித்திருந்தது. மேலும் அரசுப் படை முகாம்களை விட்டு விலகியிருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி யிருந்தது.

தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் அல்-ஷபாப் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கு சோமாலிய அரசுப் படையும் ஆப்பிரிக்க யூனியன் அமைதிப் படையும் தயாராகி வரும் நிலை யில், இந்த குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x