Last Updated : 10 May, 2017 01:32 PM

 

Published : 10 May 2017 01:32 PM
Last Updated : 10 May 2017 01:32 PM

எஃப்.பி.ஐ. இயக்குநரை பணிநீக்கம் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரணை செய்து வந்த எஃப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமேயை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஜேம்ஸ் கோமேயிக்கு கடிதம் எழுதிய ட்ரம்ப், உளவு அமைப்பை திறம்பட உங்களால் நடத்த முடியவில்லை, மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய உங்களை நாங்கள் உடனடியாக பணி நீக்கம் செய்கிறோம், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் கேபிடால் ஹில்லில் ஜேம்ஸ் கோமே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பிரச்சார வியூகத்தை வடிவமைத்தது ரஷ்ய தகவல்களால் என்று வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் அங்கு ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சான் ஸ்பைசர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அட்டர்னி ஜெனரல்கள் ஜெஃப் செஷன்ஸ் மற்றும் ராட் ராசன்ஸ்டெய்ன் ஆகியோரது பரிந்துரைகளை ஏற்று ஜேம்ஸ் கோமேயை ட்ரம்ப் நீக்கினார்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x