Published : 10 Sep 2018 12:06 PM
Last Updated : 10 Sep 2018 12:06 PM

அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பு குழப்பம் முடிவுக்கு வந்தது: அடுத்த தலைவர் யார்?

சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கு பதில் 2019-ம் ஆண்டு அவர் ஓய்வு பெறுகிறார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா, சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றியது. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.

ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல் வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.

முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா, ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத்தினால் வேலை கிடைக்காமல் திண்டாடியவர். 1999-ம் ஆண்டில் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங்கியதுதான் அலிபாபா நிறுவனம்.

இந்நிலையில், 54 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சனிக்கிழமை அன்று தகவல் வெளியானது. ஜாக் மாவிடம் பேட்டி கண்ட, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, செப்டம் பர் 10-ம் தேதியான இன்று ஓய்வு பெறுவதாக தகவல் வெளியிட்டது.

அவர் மீண்டும் கல்விப் பணியில் ஈடுபடப்போவதாக கூறப்பட்டது. இது சீனாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வளர்ந்து வரும் அலிபாபா நிறுவனத்தின் செயல்பாடுகளில் தளர்ச்சி ஏற்படலாம் என சீன அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து அலிபாபா நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஜாக் மா ஓய்வு தொடர்பாக வெளியான தகவல் உண்மை அல்ல, இதுதொடர்பாக, அவரது பிறந்தநாளான செப்டம்பர் 10-ம் தேதி அவரே விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது ஓய்வு தொடர்பாக ஜாக் மா இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2019-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அன்று தான் ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியான, 46 வயதாகும் டேனியல் ஷாங்கிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும், அதேசமயம் இயக்குநர்களில் ஒருவராக தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டேனியலின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.  அவரது பகுப்பாய்வு திறன் இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். அவருக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ எனக கூறினார்.

அலிபாபா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலகுவதற்கு சற்று கால அவகாசம் தேவை என நிர்வாகிகள் கருதுகின்றனர். உடனடியாக பொறுப்புகளை அவர் விடக்கூடாது என அவர்கள் வற்புறுத்தியதாகவும், அதனால் கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்புகளை ஒப்படைத்த பின், அடுத்த ஆண்டு, அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x