Last Updated : 28 Sep, 2018 07:22 PM

 

Published : 28 Sep 2018 07:22 PM
Last Updated : 28 Sep 2018 07:22 PM

‘விடுதலைப் புலிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரைத் தாக்க திட்டமிட்டனர்’: அதிபர் சிறிசேனா பகீர்

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் சென்னையில் இருந்து விமானத்தை இயக்கி கொழும்பு நகரைத் தாக்க திட்டமிட்டிருந்தனர், இந்த விவரங்கள் என்னைத் தவிர வேறுயாருக்கும் தெளிவாகத் தெரியாது என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடந்தது. இறுதியில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர்

இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும் ராணுவத்தினர் கண்காணிப்பில்தான் இன்னும் ஒரு சில பகுதிகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2009-ம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் உச்சத்தில் இருந்தது. அப்போது, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமரும் எங்குச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. நாட்டுக்குப் பாதுகாப்புத்துறைக்கு என தனிச் செயலாளர் இல்லை, ராணுத்தளபதியும் இல்லை. நான் பாதுகாப்புத்துறையை கூடுதலாகக் கவனித்துவந்தேன்.

அதிலும் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்தது. அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளனர் என்பதால் நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தேன். இது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்.

விடுதலைப்புலிகளில் வான்புலிகள் என்ற படை உண்டு. ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு வான்புலிகள் விமானம் மூலம் கொழும்பு விமான நிலையத்தைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த முறையும் தாக்குவார்கள் எனத் தெரியும். ஆனால், விமானம் எங்கிருந்து பறந்துவந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்தோ அல்லது வேறுஏதோ காட்டுப்பகுதியில் இருந்தோ விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஆனால், நானும்கூட கொழும்பு நகரில் தங்கவில்லை. கொழும்பு நகரில் விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்பதால், நான் நகரைவிட்டு வேறு இடத்தில் தங்கி நிலவரங்களைக் கவனித்தேன். இவ்வாறு அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x