Published : 25 Sep 2018 11:56 AM
Last Updated : 25 Sep 2018 11:56 AM

அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம்: இம்ரான் கான்

பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்று  அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல், இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை ஏற்பட தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும்  இம்ரான் எழுதினார். இதற்கு இந்திய தரப்பில் இசைவு தெரிவிக்கப்பட்டது.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபைக்கூட்டத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்திருந்தன. இதனால், 2016-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் பேச்சு தொடங்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் காஷ்மீரில்  இந்திய போலீஸார் 3 பேரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக்கொலை செய்தனர். மேலும் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானிக்கு இஸ்லாமாபாத்தில்  தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்தச் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு நியூயார்க்கில் அடுத்தவாரம் நடக்க இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்தது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டதாகவும் இந்தியா விமர்சித்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு இம்ரான் கான் பதிலளிக்கும்போது, "பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தை முடிவை இந்திய பலவீனமாக கருத வேண்டாம். இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை நடத்து முன் அதற்கான பயிற்சியை எடுப்பது அவசியம்” என்றார்.

பேச்சு வார்த்தையை ரத்து செய்த இந்தியாவின் முடிவு அகங்காரத்தையும், எதிர்மறையாகவும்  இருக்கிறது என்று இம்ரான் கான் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது பேச்சு வார்த்தைக்கு ஆதரவை மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x