Published : 05 Sep 2014 09:42 AM
Last Updated : 05 Sep 2014 09:42 AM
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் மர்தான் நகரத்தில் அமர்ஜீத் சிங் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்கு அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த புதன்கிழமை தன் மகன் ககன் சிங்கிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந் தார். மதியம் 2 மணிக்கு கடைக்கு வந்த அமர்ஜீத் சிங் தன் மகனை வீட்டுக்குச் செல்லுமாறு கூறினார். அதன்பிறகு 5 மணிக்கு ககன் சிங் கடைக்குத் திரும்ப வந்தார். அப்போது அவர்களது கடை பாதி மூடப்பட்டிருந்தது.
தனது தந்தையையும் காணவில்லை. பின்னர் கடையையொட்டிய கிடங்குக்குள் சென்று பார்த்தபோது அங்கு அமர்ஜீத் சிங் கொல்லப்பட்டுக் கிடந்தார். காவல்துறையினரின் விசாரணையின்போது அமர்ஜீத் சிங்குக்கு எந்த எதிரிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மூன்று சீக்கியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் மூவரும் தங்களுக்குச் சொந்தமான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையைத் திறக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT