Last Updated : 27 Sep, 2014 02:00 PM

 

Published : 27 Sep 2014 02:00 PM
Last Updated : 27 Sep 2014 02:00 PM

பிரதமர் மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: இந்தியா கண்டனம்

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

2002-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புபடுத்தி நியூயார்க் நீதிமன்றத்தில் 'அமெரிக்கன் ஜஸ்டிஸ் சென்டர் (ஏஜேசி)' என்ற மனித உரிமை அமைப்பு 28 பக்க குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்தது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டு சாட்சியங்களாக உள்ள இருவர் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

1789-ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஏடிசிஏ என்ற சட்டத்தின்படி, வெளிநாடுகளில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் மீது அமெரிக்க வாழ் மக்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும்.

அந்த வகையில் இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் தெற்கு மாவட்ட பெடரல் நீதிமன்றம், நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாக உள்ளதாகவும், அமெரிக்க பயணத்தின் போது பிரதமரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்மன் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த சம்மனுக்கு தொடர்பாக தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஜோஷ் ஏர்னெஸ்ட், " இந்திய பிரதமர் நாட்டின் தலைவராக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, உயர் பொறுப்பில் இருக்கும் அவருக்கு இந்த சம்மன் பாதிப்பு ஏற்படுத்தாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x