Published : 24 Jun 2019 10:25 AM
Last Updated : 24 Jun 2019 10:25 AM

அதிகரிக்கும் மோதல்: ஈரான் மீது சைபர் தாக்குதலை நடத்திய அமெரிக்கா

ஈரானுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் கணினிகளில் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், “ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் கணினிகளில் அமெரிக்கா சைபர் தாக்குதலை  நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியற்குப் பதிலாக நடத்தப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா இந்த சைபர் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தவில்லை என்று ஈரான் பதிலளித்துள்ளது.

இதுகுறித்து ஈரானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முகமத் ஜாவத் அசாரி கூறும்போது, ”அவர்கள் கடுமையாக முயற்சித்தார்கள் . ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

ஈரான் சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளதா என்று பத்திரிகைகள் கேட்டால் கடந்த ஆண்டிலிருந்தே நாங்கள் சைபர் தாக்குதலை எதிர் கொண்டு உள்ளோம்” என்றார்.

முன்னதாக, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியாக இருப்பதாக ஈரான் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது.

கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இப்படி தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துவந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்றார். ஈரானும், ‘ஒரு குண்டு ஈரான் பக்கம் வந்தாலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்கள் பற்றி எரியும்’ என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் தொடர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போர் தொடுக்கவும்  தயங்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x