Published : 01 Jun 2019 03:56 PM
Last Updated : 01 Jun 2019 03:56 PM
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு நிதிதிரட்டிய 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள், சிறையும் அபராதமும் விதித்து தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்வதேச அளவில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ ஜாங்வி, ஐஎஸ், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிதிரட்டுவர்களை கடந்த சில மாதங்களாக தீவிரமாகக் கைது செய்து அவர்களுக்கு நிதி செல்லாமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலா சிறப்பு தீவிரவாத தடுப்புப்பிரிவு அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம். இப்திகார், முகமது அஜ்மல், பிலால் ஆகியோரை கைது செய்தது. இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டிலும் நிதி திரட்டி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குஜ்ரன்வாலா தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணை முடிவில் இப்திகார், முகமது அஜ்மல், பிலால் ஆகிய மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதித்தது.
இதில் இப்திகாருக்கு ரூ.45 ஆயிரம், முகமது அஜ்மலுக்கு ரூ.50 ஆயிரம், மற்றும் பிலாலுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜ்ரன்வாலா தீவிரவாத தடுப்பு பிரிவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வசூலிப்பது, ஆதரவு தெரிவிப்பது போன்றவை விசாரணைக்கு பின் நிறுத்தப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கையில் அந்த அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டால், அந்த அமைப்புகளின் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஹபிஸ் சயித்தின் ஜமாத் உல் தவா அமைப்புக்கு நிதியுதவி பெற்றுவந்த 3 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் 6 பேர் அந்த அமைப்பு நிதியுதவி திரட்டும்போது கைது செய்யப்பட்டனர். இதேபோல திங்கள்கிழமை ஐஎஸ், லஷ்கர் இ ஜாங்கவி ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி திரட்டிய 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் ராவல்பிண்டி, குஜ்ரன்வாலா, முல்தான், லாகூரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT