மக்கள் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டால் நாட்டை எப்படி முன்னேற்ற முடியும்? - இம்ரான் கான் சரமாரி கேள்வி

மக்கள் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டால் நாட்டை எப்படி முன்னேற்ற முடியும்? - இம்ரான் கான் சரமாரி கேள்வி
Updated on
1 min read

பாகிஸ்தான் மக்கள் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டால் நாட்டை எப்படி முன்னேற்ற முடியும் என பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டு மக்கள் தங்கள் சொத்துக் கணக்கை ஜூன் 30-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். வங்கியில் வைத்துள்ள பணம், பினாமி பெயர்களில் உள்ள சொத்துகள், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள பணம் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். நாம் வரிகட்டவில்லை என்றால், நமது நாட்டை நாம் முன்னேற்ற முடியாது. ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது.

அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். பினாமி பெயர்களில் சொத்துக்கள் பதுக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களை அரசு ஏற்கெனவே திரட்டியுள்ளது.பதுக்கி வைத்துள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவித்து அதற்குரிய வரியை செலுத்தி விட்டால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்தியினரின் எதிர்காலத்துக்கும் நல்லது.

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபயாக உயர்ந்துள்ளது. வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூட வரி வசூல் ஆவதில்லை. பிறகு எப்படி கடனை கட்ட முடியும். அன்றாட செலவுக்கே பணம் இல்லையென்றால் எப்படி அரசை வழிநடத்த முடியும். பணம் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டால் செலவு செய்வதற்கு அரசு பணத்துக்கு எங்கே போகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in