Last Updated : 04 Jun, 2019 09:42 AM

 

Published : 04 Jun 2019 09:42 AM
Last Updated : 04 Jun 2019 09:42 AM

இலங்கையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 2 ஆளுநர்கள், 9 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 2 ஆளுநர்கள், 9 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.

இலங்கை அரசு தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக முழுமையான  விசாரணை நடத்த ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அதேசமயம், இலங்கையில் 9 சதவீதம் அதாவது 2.10 கோடி முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம், ஆனால் அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறுகிறது என்று முஸ்லிம் எம்.பிக்கள்  குற்றம்சாட்டினர்

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்களில் 19 எம்.பிக்கள் இருக்கிறார்கள். இதில் 9 பேர் கேபினட் பொறுப்பு வகிக்கின்றனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டியின் போது மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 250 பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இலங்கையில் செயல்பட்டு வந்த தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புதான் காரணம் என்று இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து இந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், நிதியுதவி வழங்குபவர்கள் உள்ளிட்டோரை போலீஸார் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் கடைகள், உடமைகள், வீடுகள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையை அமைச்சரவையில் இருக்கும் 3 அமைச்சர்கள் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் இருப்பு வைத்திருக்கிறார்கள். அவர்களை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரி கடந்த 4 நாiட்களாக, கோயில் நகரமான கண்டியில் புத்தமதத் துறவியும், சிறீ சேனாவின் கூட்டணி கட்சியின் எம்.பி.யுமான அதுராலியே ரதனா அங்குள்ள புத்தர் வழிபாட்டுத்தலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

10ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த மதத்தினர், முஸ்லிம்களுக்கு எதிரான வாசகங்களுடன் கண்டியில் போராட்டத்தில்  நேற்று  ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், கொழும்புவைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் கார்டினல் மால்கம் ரஞ்சித்தும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும், ரதனாவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கை அதிபர் சிறீசேனாவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களான ஆசாத் சாலே மற்றும் மால்ம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரவுப் ஹக்கிம் கூறுகையில், " முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை முடியும்வரை நாங்கள் அரசுக்கு ஆதரவு அளிப்போம்" எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டணியின் செய்தித்தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன் ட்விட்டரில் கூறுகையில், " இனவாதிகளின் நெருக்கடியால், அழுத்தத்தால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகி இருப்பது வேதனைக்குரியது. நேற்று நாங்கள், இன்று நீங்கள், நாளை வேறு ஒருவருக்கு இதுபோன்று நடக்கும். நாங்கள் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x