

மடகாஸ்கரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மடகாஸ்கர் ஊடகங்களில், ''மடகாஸ்கரில் ஜூன் 26 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மஹாமாசினா ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இதனைக் காண ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது ராணுவ வீரர்களின் அணிவகுப்பு முடிந்தவுடன் பார்வையாளர்களிடம் ஏற்பட்ட நெருக்கடியில் தவறி விழுந்து 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்'' என்று செய்தி வெளியானது.
இந்த விபத்தில் காயமடைந்த ஜின் கிளவ்டி கூறும்போது, ''நாங்கள் மைதானத்தின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். இதில் எதிர்பாராமல் கதவு திறக்கப்பட்டதில் பலர் விழுந்தனர். சிலர் எங்களைத் தள்ளிவிட்டு ஓடினர்'' என்றார்.
விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மடகாஸ்கர் அதிபர் ஆண்டிரி இரங்கல் தெரிவிததுள்ளார். மடகாஸ்கரின் சுதந்தர தினத்தில் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.