Last Updated : 08 Jun, 2019 10:58 AM

 

Published : 08 Jun 2019 10:58 AM
Last Updated : 08 Jun 2019 10:58 AM

அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க விருப்பம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

இருதரப்பு நாடுகளுக்கு இடையே வேற்றுமையை ஏற்படுத்துகிற காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க ஆர்வத்துடன் இருப்பதாக பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் நடக்கும் எசிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கும் திட்டம் ஏதும்  பிரதமர் மோடிக்கு இல்லை என இந்தியா தெரிவித்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கடிதத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் மக்களும் வறுமை, ஏழ்மையில் இருந்து வெளிவருவதற்கும், பிராந்திய மேம்பாட்டுக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும்.

காஷ்மீர் விவகாரம் உள்பட, இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை உருவாக்கும் அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஆர்வமாக இருப்பதாக இம்ரான் கான் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மக்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற தான் விருப்பமாக இருப்பதாகவும் இமரான் கான் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டபின் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் பெரிய அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா தரப்பிலும் பதிலடி தரப்பட்டு, பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானபின், கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது  பேசிய இம்ரான்கான், " தெற்கு ஆசியாவின் வளர்ச்சி, மேம்பாடு, அமைதி ஆகியவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்ல மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்"

அப்போது இம்ரானிடம் பேசிய பிரதமர் மோடி " பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட தீவிரவாதம் வன்முறை இல்லாத நம்பிக்கையான சூழலை உண்டாக்குங்கள்" என வலியுறுத்தினார்.

இதற்கிடையே கிரிகிஸ்தானில் நடைபெறவுள்ள எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரான் கானும் சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று நேற்று முன்தினம் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x