Published : 15 Jun 2019 06:10 PM
Last Updated : 15 Jun 2019 06:10 PM

சிரியாவில் அரசுப் படை தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேர் பலி

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் அரசு ஆதரவுப் படைகளும் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, ''சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹமா மாகாணத்தில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இதில் பல அரசுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் கொல்லப்பட்டனர்'' என்று தெரிவித்தது.

மேலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்களில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

சிரியப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் துருக்கு போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x