

ஈரானுடன் மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 1,000 வீர்ரகளை கூடுதலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பாட்ரிக் ஷானாஹான் கூறும்போது, “ஈரானின் விரோதச் செயலுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரானுடன் எந்த மோதல் போக்கையும் கையாளவில்லை. ஆனால் எங்களது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் எங்களது ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த வியாழக்கிழமையன்று ஹர்மஸ் கடற்பகுதியில் (உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய நீர்வழி) இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததுடன், தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவியதாகவும், கப்பலிலிருந்த குழுவைக் காப்பாற்றியதாகவும் பதிலளித்தது. ஆனால், இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அணு ஆயுத சோதனை ஒப்பந்த மீறலில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் வளைகுடா பகுதியில் தொடர்ந்து எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.