Published : 14 Jun 2019 09:20 PM
Last Updated : 14 Jun 2019 09:20 PM
விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறைச் செயலர் கையெழுத்திட்டதையடுத்து இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா அர்புத்நாட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 2020-ல் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். அதாவது நாடுகடத்தும் உத்தரவு மீதான முழு விசாரணை பிப்ரவரி 25ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும்.
உயர் பாதுகாப்பு லண்டன் பெல்மார்ஷ் சிறையிலிருந்து வீடியோ இணைப்பு வழியாக நீதிபதியிடம் பேசிய ஜூலியன் அசாஞ்சே, “‘என் வாழ்க்கையின் 175 ஆண்டுகள் இதில் பணயப்பொருளாக மிக நிச்சயமான அபாயத்தில் சிக்குண்டு கிடக்கின்றன’ விக்கிலீக்ஸ் என்பது ஒரு வெளியீட்டு நிறுவனம் மட்டுமே” என்றார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 47 வயதான ஜூலியன் அசாஞ்சே சார்பாக வாதாடிய பாரிஸ்டர் ‘பலவகையான ஆழமான விவகாரங்களை’ என் கட்சிக்காரருக்கு எதிரான இந்த வழக்கு எழுப்புகிறது என்றதோடு ஜூலியன் அசாஞ்சேவின் தற்போதைய 50 வார சிறைத்தண்டனையையும் எதிர்த்து முறையிடுவார் என்றார். மேலும் அசாஞ்சே மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான முழு வீச்சான தாக்கு என்று நீதிபதியிடத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே கோர்ட் வாசலில் அசாஞ்சே ஆதரவாளர்கள் அசாஞ்சேவுக்கு நீதி கேட்டு கோஷமிட்டனர்.
அமெரிக்க அரசு சார்பாக வாதிட்ட பாரிஸ்டன் பென் பிராண்டன் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரகசிய தகவல்கள் மீது சமரசம் செய்து கொள்ளப்பட்ட விவகாரம் ஆகும் இது. அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளர் செல்சீ மேனிங் என்பவரை அணுகி சட்ட விரோதமாக ஆவணங்களை பெற்றுள்ளார், பிறகு அவருடன் சேர்ந்து பெண்டகன் பாஸ்வேர்டையும் ஹாக் செய்துள்ளார் இப்படியாக அவர் பல சதிவேலைகளில் ஈடுபட்டார் என்றார்.
இவர் கூறும் ஆவணங்கள் ஆப்கான் மற்றும் இராக் போர் பற்றிய அமெரிக்க ராணுவ தகவல்கள் அடங்கிய ஆவணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT