Published : 03 Sep 2014 06:54 PM
Last Updated : 03 Sep 2014 06:54 PM

குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து காக்கிறது தினசரி காலை உணவு

குழந்தைகள் தினமும் காலை உணவைப் புறக்கணிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், ஏனெனில் ஆரோக்கியமான காலை உணவு குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வு இதனைத் தெரிவித்துள்ளது.

"காலை உணவு குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் டைப்-2 சர்க்கரை நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது” என்று இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் அஞ்சேலா டோனின் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயிலும் 4,116 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களிடம் காலை உணவு தினசரி எடுத்துக் கொள்கிறார்களா என்றும் என்ன வகையான உணவு எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேட்கப்பட்டதோடு, இவர்களுக்கு சர்க்கரை நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குழந்தைகளில் 26% தாங்கள் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்தனர். இவர்களைப் பரிசோதனை செய்ததில் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளது.

இந்தியக் குழந்தைகளுக்கும் இந்த ஆய்வு மிக முக்கியமானது. ஏனெனில் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்கு அவசரம் அவசரமாகக் கிளப்புவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துகின்றனர். 8 மணிக்கு ஆட்டோ வந்து விடும், வேன் வந்து விடும் என்று அவசரம் அவசரமாக நூடுல்ஸ் போன்ற உணவுகளை கொடுப்பதைப் பார்க்கிறோம்.

காலையில் ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது குழந்தைகளை மிகச் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆட்படாமல் தடுக்கும் வழி என்று இந்த ஆய்வு தற்போது தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x