Published : 01 Sep 2014 12:13 PM
Last Updated : 01 Sep 2014 12:13 PM

சுகாதார அதிகாரிகளுக்கும் எபோலா பாதிப்பு: 240 மருத்துவர்களுக்கு வைரஸ் தாக்கு

நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்நோயால் 120 சுகாதார அதிகாரிகள் பலியான நிலையில், மேலும் 240 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத்துவங்கிய எபோலா விஷத் தொற்று நோய் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரிசையாக பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை இந்நோய்க்கு 1,552 பேர் பலியாகி உள்ளனர். 3,062 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகளும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு எபோலா தாக்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது போல, இதுவரையிலும் 120 சுகாதார அதிகாரிகள் எபோலாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 240 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனிடையே எபோலா வைரஸ் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே மிக மெதுவாகவே நடக்கின்றன என்றும், உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்நோய் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு, உலகில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், இது நீடிக்குமானால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அந்த அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x