Published : 24 Mar 2018 08:52 AM
Last Updated : 24 Mar 2018 08:52 AM

சவுதி அரேபியா வழியாக நேரடியாக இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா சேவை

சவுதி அரேபியா வான் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு நேரடி வர்த்தக விமான சேவை தொடங்கியிருப்பதன் மூலம் ஏர் இந்தியா வரலாறு படைத்துள்ளது.

டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா நேரடி வர்த்தக விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. வாரத்துக்கு 3 நாட்கள் (செவ்வாய், வியாழன், ஞாயிறு) இயக்கப்படும் இந்த விமானம் தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது.

இந்த விமானம் 7.25 மணி நேரத்தில் இஸ்ரேலை அடைந்தது. சவுதி தனது வான் எல்லையை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதால் பயண நேரம் 2 மணி 10 நிமிடம் குறைந்துள்ளது.

இஸ்ரேலை பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதனால் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் எல்லையை பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை. தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் இஸ்ரேலிய விமானம் செங்கடல் மற்றும் ஏடென் வளைகுடா வழியாக செல்கிறது.

இந்நிலையில் இந்தியா, இஸ்ரேல் பிரதமர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக சவுதி அரேபியா முதல்முறையாக ஏர் இந்தியா விமான சேவைக்கு வான் எல்லை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விமான சேவை குறித்து இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சர் யாரிவ் லெவின் கூறும்போது, “இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவு வலுப்படுவதுடன் இரு நாடுகளிடையே மக்கள் தொடர்பும் இனி அதிகரிக்கும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x