Last Updated : 24 Sep, 2014 10:45 AM

 

Published : 24 Sep 2014 10:45 AM
Last Updated : 24 Sep 2014 10:45 AM

புதிய வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ். - பிரிட்டிஷ் பிணைக் கைதி உருக்கமான வேண்டுகோள்

பிரிட்டிஷ் பிணைக்கைதி ஜான் கான்ட்லி பேசும் புதிய வீடியோவை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கான்ட்லி (43), நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நிருபராக சிரியாவில் பணியாற்றி வந்தார். கடந்த 2012-ம் ஆண்டில் அவர், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜான் கான்ட்லியின் வீடியோவை ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டது. தான் கைதியாக இருப்பதாகவும் தனது உயிர் ஊசலாடுவதாகவும், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ஜான் கான்ட்லியின் 2-வது வீடியோவை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டது. ஐந்து நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது 3-வது வளைகுடா போரில் ஈடுபட்டுள்ளன, இந்தப் போரில் அமெரிக்காவுக்கு வியட்நாம் போரில் ஏற்பட்ட கதிதான் நேரிடும்.

ஐ.எஸ். படையில் குறைவான வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போடவேண்டாம், பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் அணி திரண்டு நிற்கின்றனர். இது ஏதோ ஒழுங்கற்ற அமைப்பு என்றும் சில துப்பாக்கிகளை மட்டும் வைத்து கொண்டு மிரட்டுகிறார்கள் என்றும் நினைக்க வேண்டாம்.

உலக வரலாற்றில் ஐ.எஸ். படை மிகப்பெரிய ஜிகாதி இயக்கம். அந்த இயக்கத்தை அமெரிக்கா அழித்து விட முடியாது, என்னைப் போன்ற பிணைக் கைதிகளை காப்பாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்று ஜான் கான்ட்லி அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆலன் ஹெனிங் என்ற பிரிட்டிஷ் பிணைக்கைதியை கொல்வோம் என்று ஏற்கெனவே வீடியோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x