Published : 21 Mar 2018 06:18 PM
Last Updated : 21 Mar 2018 06:18 PM

ஃபேஸ்புக்கிலிருந்து ஐந்து கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: அத்துமீறிய அனலிட்டிகா

 ஃபேஸ்புக்கிலிருந்து 5 கோடி பயனாளர்களின் தகவல்களை லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அனலிட்டிகா நிறுவனம் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பின் துணை நிறுவனரான பிரைன் அக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஃபேஸ்புக்கை நீக்க வேண்டிய நேரம் இது' ( #deletefacebook) என்று தனது பின்தொடர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து  இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

என்ன செய்தது அனலிட்டிகா நிறுவனம்?

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பல எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் தாண்டி ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ட்ரம்பின் வெற்றிக்கு ரஷ்யாவின் தொடர்பு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசியல் தகவல் ஆய்வு மற்றும் மக்களின் உளவியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா,  ஃபேஸ்புக் பயனாளிகள் ஐந்து கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

ஃபேஸ்புக் டைம் லைனில், 'நீங்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் தெரியுமா?' போன்ற புதிர் போட்டிகள் விளையாடும்போது, விளையாடும் நபரின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் திரட்டியதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களை குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த 5 கோடி பேரின் தகவல்களை ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் விற்றதாகவும் இதன் மூலம்உளவியல் ரீதியாக மக்களைக் கண்டறிந்து அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்புக்கு சாதகமான தகவல்கள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அனலிட்டிகா நிறுவனம் மறுத்துள்ளது.

மேலும், ஃபேஸ்புக், இதுபோன்ற புதிர் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் விதிமுறைகள் மீறப்பட்டது என்று  அறிந்தவுடன் அதை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக பங்குச்சந்தையில் ஃபேஸ்புக் மதிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவைச் சந்தித்தது.

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல்களை ‘கசிய’ விடும் ஊழியர்களைக் கண்டறிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், ‘ரகசிய போலீஸ் படையை’ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x