Last Updated : 16 May, 2019 05:14 PM

 

Published : 16 May 2019 05:14 PM
Last Updated : 16 May 2019 05:14 PM

அணுகுண்டு சோதனைகளால் விளைந்த அணுக்கழிவுகள் கடலில் கலக்கும் அபாயம்: கிளம்பியது புதிய கவலை

அணுகுண்டு சோதனைகளை நடத்தி அதனால் விளைந்த அணுக்கழிவுகளை ஒரு இடத்தில் பெரிய குழியில் கான்க்ரீட் ராட்சத மூடி போட்டு வைக்கப்பட்ட இடத்தில் அணுக்கழிவுகளிலிருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது, இந்தக் கதிர்வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருவதாக ஐ.நா. பெரும் கவலை வெளியிட்டுள்ளது.

 

ஃபீஜியில் மாணவர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் மார்ஷல் தீவுகளில் எனிவிடாக்கில் ஒரு மிகப்பெரிய கான்கிரீட் மூடிபோடபப்ட்ட ஒரு அமைப்பைப் பற்றி பேசியுள்ளார். அதாவது அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் காலக்கட்டங்களில் மார்ஷல் தீவுகளில் ஏகப்பட்ட அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. அதனால் விளைந்த அணுக்கழிவுகளை அணுகுண்டு சோதனையினால் ஏற்பட்ட மிகப்பெரிய குழியில் போட்டு அதற்கு ஒரு கான்கிரீட் மூடியையும் போட்டுள்ளனர். ஆனால் இந்த மிகப்பெரிய மூடியில் இப்போது லேசான வெடிப்புகள் தோன்ற அணுக்கழிவுகள் பசிபிக் கடலில் கலக்கின்றன என்றார் கட்டரெஸ்.

 

“அமெரிக்காவும், பிரான்சும் ஏகப்பட்ட அணுகுண்டு சோதனைகளை நடத்தி பசிபிக் தீவுகள், கடல் பகுதியை பலிகடாப்பகுதியாக்கியதை நாம் பார்த்து வருகிறோம்” என்றார் கட்டரெஸ்.

 

மார்ஷல் தீவுகளில் நிறைய பூரிவீகக் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அணுக்கதிர்வீச்சுக்கு ஆளாகியுள்ளனர்.

 

மார்ஷல் தீவுப்பகுதியான பிகினி, எனிவிடாக் பகுதியில் 1946-58 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா 67 முறை அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த அணுசோதனைகளில் 1954-ல் பிராவோ ஹைட்ரஜன் குண்டு சோதனையும் அடங்கும். இதுதான் அமெரிக்கா வெடிக்கச் செய்த குண்டுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது. ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகும் இந்த பிராவோ ஹைட்ரஜன் குண்டு.

 

தெற்குபசிபிக் தீவுகளில் சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஐநா தலைவர் கட்டரெஸ், இன்னும் கூட பசிபிக் தீவு மக்கள் இந்த அணு ஆயுத சோதனைகளின் விளைவுகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.

 

“இவற்றாலெல்லாம் ஏற்படும் ஆபத்து பயங்கரமானது, ஆரோக்கியம், சுகாதாரம் பறிபோவதோடு, கடல்நீர் விஷமாக்கப்படுகிறது” என்கிறார் அவர்.

 

மேலும், மார்ஷல் தீவுகளின் அதிபர் ஹில்டா ஹெய்னைச் சந்தித்தேன், அவர் சவப்பெட்டி போல் மூடிபோட்ட அணுக்கழிவு பள்ளத்திலிருந்து கதிர்வீச்சு கடல்நீரில் கலக்கிறது இது குறித்து கவலையடைந்துள்ளதாகக் கூறியதாக கட்டரெஸ் தெரிவித்தார்.

 

ரூனித் தீவில் இந்த கான்க்ரீட் டோம் 1970களில் கட்டப்பட்டது. இங்குதான் அணுக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த டோம் 45 செமீ அடர்த்திக் கொண்டது. இதற்குள் கதிர்வீச்சு மண் மற்றும் அணுகுண்டு சோதனையில் விளைந்த சாம்பல் ஆகியவை போட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளன.  இந்த டோம் தற்காலிகமானது, ஆனால் இந்த சவப்பெட்டி போன்ற அமைப்பின் அடிப்பகுதி பலமாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. எனவே அடிப்பகுதியிலிருந்து அணுக்கழிவுகள் பசிபிக் கடலில் கலக்கும் அபாயம் உள்ளது.

 

மேலும் டோம் அவ்வளவு பலமானது அல்ல அதிலும் புதிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன, ஒரு பெரிய புயல் அடித்தால் அது தாங்குமா என்று தெரியாது என்கின்றனர் நிபுணர்கள்.

 

இதன் தாக்கங்களை குறைக்க அமெரிக்க, பிரான்ஸ் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x