Published : 12 Apr 2019 02:42 PM
Last Updated : 12 Apr 2019 02:42 PM

இட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் பதுங்கியுள்ளார்: சிரியா

ஐஎஸ் தலைவர் அபூபக்கர் பாக்தாதி இட்லிப் மாகாணத்தில் உயிருடன் இருப்பதாக சிரியாவின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் செய்தி சேனல் ஒன்றுக்கு சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் அபூபக்கர் பக்தாதி பதுங்கி இருக்கிறார்'' என்றார்.

இதற்கு முன்னரும் இராக் பாதுகாப்புப் படைகள் அபூபக்கர் பாக்தாதி உயிருடன் இருப்பதாகக் கூறி வந்தது. இந்த நிலையில் சிரியா தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் எதிராக உள்நாட்டுப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பல்வேறு பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன.

சிரியாவின் ராக்கா அருகே கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் கூறியது.

எனினும் பாக்தாதி இறந்ததற்கான எந்த உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாக்தாதிக்கு அத்தாக்குதலில் வெறும் காயம் மட்டுமே எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிரியாவில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x