Last Updated : 21 Apr, 2019 07:03 PM

 

Published : 21 Apr 2019 07:03 PM
Last Updated : 21 Apr 2019 07:03 PM

இலங்கையில் 8 இடங்களில் நடந்த  மனிதவெடிகுண்டு தாக்குதலில் 215 பேர் படுகொலை: 500 பேர் காயம்: என்ன பிரச்சினை?

இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போரால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியின்மையோடு இலங்கை காணப்பட்டது. ஆனால், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபின் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அமைதி திரும்பியநிலையில், அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும்.

இது குறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவான் குணசேகரா கூறியதாவது:

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோனி தேவாலயம், மட்டகளப்பில் உள்ள தேவாலாயம்,  நீர்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் இன்று காலை ஈஸ்டர் பண்டிகைக்கான சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது, காலை உள்ளூர் நேரப்படி 8.45 மணிக்கு பயங்கர சத்தத்துடன் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது.

முதல் தாக்குதல், கொச்சிகடாவில் உள்ள புனித அந்தோனியர் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. மட்டக்களப்பு தேவாலாயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்பட்டபின் தேவாலாயங்களில் பல இடங்களில் மக்கள் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், சுவற்றில் சதைத் துண்டுகள் பரவிய நிலையில், தரைமுழுவுதம் ரத்தத்துடன் அந்த இடமே போர்களம் போல் இருந்தது.

இங்கு நடந்த தாக்குதல் போல கொழும்பு நகரில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஷாங்கிரி-லா, சினாமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய 3 ஹோட்டல்களிலும் நடத்தப்பட்டது. அங்கு மனிதவெடிகுண்டுகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. காலையில் மட்டும் 6 இடங்களில் மனிதவெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

அதன்பின் நண்பகலுக்குபின், கொழும்புநகருக்கு வடக்கே ஒருகோடவாடா எனும் பகுதியில் ஒரு வீட்டை சோதனையிட போலீஸார் முயன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த மனிதவெடிகுண்டு நடத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அங்கு சென்ற போலீஸாரில் 3 பேர் கொல்லப்பட்டனர். கொழும்பு நகரின் தெற்குப்பகுதியில் உள்ள டெல்லிவாலா உயிரியியல் பூங்கா அருகே, அதாவது பிரதமர் அலுவலகம் அருகே 7-வது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இன்று 8 மனிதவெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா, மொராக்கோ, வங்கதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் மொத்தம் 215 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கொழும்பு, மட்டகளப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக கொழும்பு உயிரியல் பூங்கா அருகே இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால், தாக்குதல் நடந்த நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குணசேகரா தெரிவித்தார்.

ஆனால், இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 7 பேரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து அதிபர் சிறீசேனா கூறுகையில் " எதிர்பாராத இந்த தாக்குதல்களை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். பாதுகாப்பு படையினர் அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் " எனத் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களுக்கும்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனைத்து சமூகஊடங்களையும் நிறுத்திவைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள இந்தியத் தூதரகம் கூறுகையில், " இலங்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ உதவி எண்கள் தரப்பட்டுள்ளது அதில் தொடர்பு கொள்ளலாம்.

+94777903082 +94112422788 +94112422789,” +94777902082 +94772234176,”  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளையும், தகவல்களையும் பெறலாம் " எனத் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் என்ன பிரச்சினை?

இலங்கையில் இன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இலங்கை விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபின் அங்கு மிகப்பெரிய அளவுக்கு தாக்குதல் சம்பவங்கள், வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கவில்லை.

ஆனால், இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் தேரவாத புத்த சிங்களா மத்ததினருக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையே கடுமையாக மோதல் நிலவி வந்தது. கடந்த ஆண்டு புத்தமதத்தினருக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையே கடுமையான மோதலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில்  70 சதவீதத்தினருக்கும் அதிகாக தெரவாடா புத்தமதத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர்கள் 9.7 சதவீதம் பேரும், இந்துக்கள் 12.6 சதவீதம் பேரும் இருக்கிறார்கள். 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 லட்சம் கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர்.இதில் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x