

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை போலீஸ் தரப்பு செய்தித் தொடர்பாளர் ரூவென் குணசேகரன் தரப்பில், ''இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல் நியூஸிலாந்தில் கடந்த மாதம் கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.