Published : 29 Apr 2019 04:20 PM
Last Updated : 29 Apr 2019 04:20 PM

பவுத்த ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்க்க பெண் தீவிரவாதிகள் திட்டமா? - இலங்கை உளவுத்துறை அதிர்ச்சி

இலங்கையில் உள்ள புத்த கோயில்களை தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அந்நாட்டு உளவுத் துறைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை அருகே சாய்ந்த மருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார், பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனையறிந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டில் இருந்த 3 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் இந்தவீட்டில்  நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆடைகளின் அடிப்படையில் பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புத்த கோயில்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக இலங்கை உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை  ஊடகங்கள் தரப்பில், பக்தர்கள் போர்வையில் பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இலங்கையிலுள்ள புத்த கோயில்களை தாக்க  திட்டமிட்டிருந்ததாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு சாய்ந்த மருதுபகுதியில் இலங்கை ராணுவம் வீடு ஒன்றில் நடத்திய சோதனையில் வெள்ளை நிற ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனை 3 பெண்கள் அங்குள்ள கடை ஒன்றில் வாங்கியுள்ளனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுவரை 5 வெள்ளை நிற ஆடைகள் கைபற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கு ஆடைகள் இருக்கின்றனவா என கண்காணிப்பு பணியில் இலங்கை உளவுத் துறை இறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இலங்கையில் உள்ள புத்த கோயில்களை தாக்க திட்டமிட்டடிருக்கலாம் என உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x