

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.
ஈக்வடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லபட்டார்.
நீதிமன்றத்தில் அசாஞ்சே சரணடையத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள இருக்கிறார். இதனால் அசாஞ்சே ஐந்து வருடம் சிறை தண்டனை பெறலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அசாஞ்சேவின் வழக்கறிஞர் கூறும்போது, ''அமெரிக்காவைப் பற்றிய உண்மையான தகவலை வெளியிட்டால் பத்திரிகையாளர்கள் எங்கிருந்தாலும் அந்நாட்டின் குற்றச்சாட்டை எதிர் கொள்வார்களா.. இது தவறான முன் உதாரணம்'' என்றார்.
மேலும் தனது ஆதரவாளர்களுக்கு அசாஞ்சே நன்றி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.