நாங்கள் முன்னரே எச்சரிக்கப்பட்டோம்: மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு

நாங்கள் முன்னரே எச்சரிக்கப்பட்டோம்:  மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு
Updated on
1 min read

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வுத் துறை முன்னரே எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, ''இலங்கையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒரு நாள் முன்னர் உளவுத்துறையால் நாங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டோம். எங்களுக்கு அளிக்கப்பட்ட தகவல்களையும் நாங்கள் பார்த்தோம்.

இந்தத் தாக்குதலை இலங்கையில் இயங்கும் தவ்ஹித் ஜமாத் அல்லது உள்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள்  நிகழ்த்தலாம் என முன்னரே எச்சரிக்கை அளிக்கப்பட்டது. இதில் 7 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.  இதனை உள்நாட்டு அமைப்புகள் தனியாக நடத்தியிருக்க முடியாது. ஏதேனும் சர்வதேச இயக்கத்துக்கு இதில் தொடர்பு இருந்திருக்கக்கூடும்.

நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஒரு அரசாங்கமாக நாங்கள் இதனை நிச்சயமாகக் கேட்க வேண்டும். இந்த குண்டுவெடிப்பில் இறந்த குடும்பங்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து குடுமபங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். பாதிப்படைந்த தேவாலயங்கள் புனரமைக்க உதவி செய்யப்படும்'' என்றார் ரஜித்தா சேனரத்னே.

முன்னதாக, கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.

இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in