Published : 23 Apr 2019 11:11 AM
Last Updated : 23 Apr 2019 11:11 AM
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பலியானோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த குண்டுவெடிப்பு காரணமாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதுகுறித்து இலங்கை போலீஸார் தரப்பு செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகர் கூறும்போது, ''இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 310 பேர் பலியாகி உள்ளனர்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா இன்று (செவ்வாய்க்கிழமை) துக்க தினமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.
இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 300 பேரைக் கொன்ற தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திய ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு முழு உதவி செய்யத் தயாராக இருப்பதாக இண்டர்போல் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT