Last Updated : 05 Apr, 2019 12:53 PM

 

Published : 05 Apr 2019 12:53 PM
Last Updated : 05 Apr 2019 12:53 PM

ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்க்க முயற்சி: பிரேசிலில் 11 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

கொள்ளையடிப்பதற்காக வங்கி ஏடிஎம் இயந்திரத்தை தகர்க்க முயன்ற 11 பேரை ராணுவ போலீஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பிரேசிலில் நேற்று (வியாழன்)நடந்துள்ளது.

இக்கொள்ளை முயற்சி குறித்து மாநில சாவோ பாலோ மாநில அரசு தெரிவித்துள்ள விவரம்:

''பிரேசிலின் கிழக்கு நகரமான கவுரேரெமா நகராட்சியில் இரு வங்கிகளில் ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்து கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றது. இதனை முன்பே மோப்பம் பிடித்திருந்த பிரேசில் ராணுவ போலீஸ் அவர்களைச் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பிச்சென்றவர்களில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தப்பியோடியவர்களில் சிலர் வேகமாக ஓடிச்சென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்துகொண்டு அவ்வீட்டில் உள்ளவர்களை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டினர். பின்னர் அவ்வீட்டில் உள்ளவர்களை போலீஸார் மீட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதே தெருவில் இருந்த இன்னொரு வங்கியிலிருந்து தப்பிச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் 25 பேர் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது''.

இவ்வாறு மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

வங்கிப் பகுதியைச் சுற்றி நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஏழு பெரிய துப்பாக்கிகள், நான்கு பிஸ்டல்கள், வெடிகுண்டுகள், குண்டு துளைக்காத ஆடைகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து பிரேசில் தொலைக்காட்சி ஒன்று இக்கொள்ளையர்கள் காவல் நிலையம் அருகேயுள்ள வங்கி ஒன்றையும் அதே தெருவில் உள்ள இன்னொரு வங்கியையும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றதாகத் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து சாவோ பாலோ மாநில கவர்னர் ஜாவோ டோரியா போலீஸ்காரர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x