Published : 21 Apr 2019 03:26 PM
Last Updated : 21 Apr 2019 03:26 PM
இலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. அடுத்தடுத்த குண்டுவெடிப்பு காரணமாக அந்நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.
அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் உடல் பாகங்கள் தேவாலயங்களுக்கு வெளியே தெறித்து விழுந்தன.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது.
பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயிரிழந்துள்ளது.
குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் நிலவி வந்தநிலையில், பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 8 பேர் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியே வராமல் மக்கள் முடங்கியுள்ளனர். அடுத்தடுத்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை போலீஸ் மற்றும் மீட்பு குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT