இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜஹ்ரான் ஹசிமின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக்கொலை

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜஹ்ரான் ஹசிமின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக்கொலை
Updated on
2 min read

இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹசமின் தந்தை, இரு சகோரதரர்கள் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

கொழும்பு நகரில் இருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள கல்முனை எனும் நகரில் ஒரு வீட்டில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று சோதனையிட முயன்றபோது போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 ஐஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் இருந்தவர்களில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 15 பேரில் 3 பேர்  ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தன்னுடைய அமாக் இணையதளத்தில் இன்று வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே  சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் தந்தை, அவரின் இரு மகன்கள் என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்றுபேரில் ஒருவரின் பெயர் முகமது ஹசிம், இவரின் இரு மகன்கள் ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹசிம்மின் மைத்துனர் நியாஸ் ஷெரீப்தான் கூறுகையில், " போலீஸார் சுட்டுக்கொன்ற 3 பேரில் ஒருவர் ஹசிமின் தந்தை முகமது ஹசிம், அவரின் மகன்களும், ஜஹ்ரான ஹசிம்மின் சகோதரர்களான ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் ஆகியோர்தான்" எனத் தெரிவித்தார்.

கல்முனை வீட்டில் வெடிகுண்டு வெடித்து இறந்த 15 பேரில் 3 பேர் ஹசிமின் தந்தையும், சகோதர்கள். இவர்கள் மூன்றும் யூடிப்பில் அடிக்கடி இஸ்லாம் குறித்து  ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டபின், நாடுமுழுவதும் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத், மற்றொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்களை பிடிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in