Published : 19 Apr 2019 02:56 PM
Last Updated : 19 Apr 2019 02:56 PM

ட்ரம்ப் ஜப்பான் சுற்றுப்பயணம்: வடகொரியா குறித்து ஆலோசனை

ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், ''அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரு நாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இதில் சமீபத்தில் வடகொரியாவுடனான உறவில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும் இரு நாட்டு வர்த்தக உரவை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் வரும் ட்ரம்ப் மனைவி மெலானியாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட  அந்நாடு திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்தச் சந்திப்பில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியா - அமெரிக்கா மோதல் பின்னணி

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x