Last Updated : 09 Apr, 2019 07:54 AM

 

Published : 09 Apr 2019 07:54 AM
Last Updated : 09 Apr 2019 07:54 AM

நீ பயங்கரவாதியா...நான் பயங்கரவாதியா...யார் பயங்கரவாதி?- அமெரிக்கா - ஈரான் வரலாறு காணாத வார்த்தை மோதல்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படையை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று வரலாறு காணாத ஒரு கூற்றை முன் வைக்க, அமெரிக்க ராணுவ முகாம்கள், அமெரிக்க ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஈரான் பதிலுக்குச் சாடியுள்ளது.

 

ஈரானின் ராணுவத்தை ஒரு நாடு பயங்கரவாத அமைப்பு என்று கூறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை, எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டு ராணுவத்தையே பயங்கரவாத அமைப்பு என்று கூறியதில்லை. அந்த மரபை ஈரான், அமெரிக்கா இரண்டம் மீறியுள்ளது.

 

9/11 இரட்டைக் கோபுர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்காவில் வலதுசாரி அமைப்புகள் இஸ்லாமிய வெறுப்புணர்வை தூண்டி வருவது பல ஆய்வுகளில் நிரூபணமான ஒரு விஷயம்.

 

ஆனால், 9/11 தாக்குதலில் தெற்காசிய பயங்கரவாத அமைப்பின் பங்கை விட பெரும்பான்மை ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பின் தாக்கமே, செல்வாக்கே அதிகம் என்று கல்விப்புல ஸ்காலர்லி ஆதாரங்களும் எடுத்தியம்பின. ஆனாலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு எதிரான இஸ்லாமிய வெறுப்புணர்வை அமெரிக்க அரசும், அதன் வலதுசாரிகளும் பரப்பி ஏற்றுமதி செய்து வருவதும் தற்போது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாவல் படையை அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார், இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர்கள் யாரும் இப்படிப்பட்டக் கருத்துகளைக் கூறியதில்லை. இதனையடுத்து ஈரானும் அமெரிக்க ராணுவம் குறித்து பதிலடி கொடுத்துள்ளது.

 

இதனையடுத்து ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்க ராணுவத்தையும் அதன் முகாம்களையும் பயங்கரவாத அமைப்பு என்றும் அரச பயங்கரவாத குழுக்கள் என்றும் கடுமையாகத் தாக்கியது.

 

இருவரும் மாறிமாறி இவ்வாறு குற்றம்சாட்டியதையடுத்து பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவ ப்படை அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்தினால் ராணுவ வீரர்களைக் காக்க என்ன நடவடிக்கை என்று பெண்டகனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போடு அங்கிருந்து பதில்வரவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இஸ்ரேல் ஆதரவு:

 

ஈரான் மீதான அமெரிக்கப் பகைமைக்கு பிரதான காரண கர்த்தாவான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதனாயு அமெரிக்க அதிபர் அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

 

“நன்றி எனதருமை நண்பர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களே. என்னுடைய முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

உலகில் உள்ள வலதுசாரி அரசுகள் எல்லாம் தங்கள் பொருளாதாரக் கொள்கைகளினால் தங்கள் நாட்டு மக்களை வதைத்து வரும் நிலையில், ஒருவகையான வெறித்தனமான தேசிய வாதத்தைத் தங்கள் ஆயுதமாக எடுத்து வரும் அபாயப் போக்குகள் அதிகரித்து வருவது கவலையளித்து வருவதாக சமூக செயல்பாட்டாளர்களும் அறிவுஜீவுகளும், கல்வியியல் துறை ஆசான்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x