Last Updated : 04 Mar, 2019 11:01 AM

 

Published : 04 Mar 2019 11:01 AM
Last Updated : 04 Mar 2019 11:01 AM

தீவிரவாத ஆதரிப்பை பாக். நிறுத்தவேண்டும்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரி அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் அருகே உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26-ம் தேதி அதிகாலையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

 

பாகிஸ்தானின் நிதி மற்றும் பிற ஆதரவுடனே  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் இயங்கிவருவதாகக் கூறப்படுகிறது. இதை மறுத்துவரும் பாகிஸ்தான், ஆதாரங்களைக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவருகிறது. எனினும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மொகமது குரேஷி, ஜெஇஎம் இயக்கத் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

 

பாகிஸ்தான் தொடர்ந்து, காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதன் தீவிரவாத ஆதரிப்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தப் போராட்டம் நியூயார்க்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பதாகைகளை ஏந்தி, தீவிரவாதத்துக்கு எதிராக கோஷமெழுப்பினர்.

 

அப்போது, உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தான், புல்வாமா தாக்குதல் மீண்டும் நிகழக்கூடாது, அப்பாவி மக்களைக் கொல்வதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும், தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை உருவாக்குவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x