Published : 20 Mar 2019 06:54 PM
Last Updated : 20 Mar 2019 06:54 PM

சீனாவும் தீவிரவாதி மசூத் அசாரும்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் விவகாரத்தில், பாகிஸ்தானை சீனா கைவிட்டுவிடும் என யாராவது நம்பினால் ஏமாந்து தான் போவார்கள். ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் சீனா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டால் போதும், இந்திய நாடாளுமன்றம், பதன்கோட், புல்வாமா தாக்குதல் களுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார். அவரது தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிச் செய்தால் அதன் பாதிப்பு பாகிஸ்தானில் எதிரொலிக்கும். ஆனால், தனது பொம்மை நாடான பாகிஸ்தான், ஏற்கனவே பொருளாதார ரீதியாக சிக்கலை சந்தித்து வரும் நிலையில், புல்வாமா தாக்குதலில் தொடர்பு காரணமாக, சர்வதேச விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் நிலையில் சீனா, அப்படியெல்லாம் பாகிஸ்தானை கைவிட்டு விடாது.

மசூத் அசார் விவகாரத்தில் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தினால், தீவிரவாதத்துக்கு உதவும் நாடு என்ற அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை என சீனா நினைப்பதற்கு, வேறு காரணங்களும் இருக்கிறது. பாகிஸ்தானில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. அங்கு அதிக எண்ணிக்கையில் சீனர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் அங்கு ஜெய்ஷ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இருப்பதை சீனாவும் அச்சுறுத்தலாகத்தான் நினைக் கிறது. அசாருக்கு நெருக்கடி கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தனது உய்கார் இன மக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் சீனா கவலை அடைந் துள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து உலக நாடுகள் அனைத் தும் தீவிரவாதத்தைக் கண்டித்து வரும் நிலையில் ஐ.நா. சபையில் பிடிவாதமாக அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுத்து வருவதால், சர்வதேச அளவில் சீனாவின் உண்மையான முகம் தெரியவந்துள்ளது. இது இந்தியா வுக்கு சாதகமாக மாறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நான்காவது முறையாக தீவிரவாதி மசூத் அசாருக்கு ஆதரவாக சீனா செயல்படுவதைக் கண்டு, மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை காப் பாற்றும் முயற்சி தவிர வேறில்லை என கருதுகின்றனர். வீட்டோ உரிமை போன்ற எரிச்சலை ஏற்படுத்தும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என அமெரிக்கா போன்ற நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. தெற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீவிர வாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறிவரும் சீனாவின் நிலைப் பாட்டுக்கு எதிராக அதன் நடவடிக்கைகள் இருப்பதாக பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவித்துள் ளன. தனது நிலைப்பாட்டில் சீனா உறுதியாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானிலோ அல்லது வேறு நாடுகளிலோ இருக்கும் தீவிர வாதிகளை ஆதரிக்கக் கூடாது. அவர்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்ய உதவ வேண்டும் என ஒரு தூதரக அதிகாரி கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் அசார் போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வும் ஜெய்ஷ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதுபோன்ற நிலையில் மற்றொரு உறுப்பு நாடான சீனா, அசார் விவகாரத்தில் இந்தியா போதுமான ஆதாரங்களை அளிக்கவில்லை என்றும் இது குறித்து முடிவு செய்ய அவகாசம் தேவை என்றும் பிரச்சினையை இழுத்தடிப்பதை மற்ற உறுப்பு நாடுகள் விரும்பவில்லை. பிரான்ஸ் நாடு ஒருபடி மேல் போய், அசார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. அதேபோல், மற்ற உறுப்பு நாடுகளும் நட வடிக்கை எடுக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம் பித்துவிட்டன. சீனாவுடன் கூட்டாக சேர்ந்து முடிவு எடுக்க முடியாத நிலையில், தனித்தனியாக நட வடிக்கைகளை தொடங்கியுள்ளன.

அசார் விவகாரம் ஐ.நா.வின் பொருளாதாரத்தடை கமிட்டியி டம் இருந்து பாதுகாப்பு கவுன்சிலி டம் செல்வதற்காக வாய்ப்பு இருக் கிறது. அப்படி சென்றால், உறுப்பு நாடுகள் சீனாவை அழைத்து, அசாரையும் பாகிஸ்தானையும் ஆதரிப்பதற்கான காரணம் குறித்து விசாரிக்க நேரிடும். அசாருக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து பேசி வந்தால், மற்ற நாடுகள் வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகி விடக்கூடாது என பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாட்டின் ஒரு தூதரக அதிகாரி கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் அசாரை சர்வதேச தீவிர வாதி என அறிவிக்க விரும்பும் போது, சீனா மட்டும் எதிர்ப்பதால் அந்த நாடு தனிமைப்பட்டு உள் ளது. கடந்த சில நாட்களாக இந்தியா வும் அதன் பிரதமரும் சீனாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு விட்டதாக ஒரு புறமும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருவதாக மறுபுறமும் கூறப்படுகிறது. சீன பொருட்களை புறக்கணிப்பது இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது சரியானதாக இருக்காது. தீவிர வாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்துவதோடு, ஐரோப்பிய யூனியனையும் அதன் உறுப்பு நாடுகளையும் அணுகி, இந்தியா தனது நிலைக்கு ஆதரவை திரட்ட வேண்டும். அப்போது, மற்ற நாடுகள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் உலக நாடுகள் அவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x