Published : 20 Mar 2019 07:48 PM
Last Updated : 20 Mar 2019 07:48 PM

‘‘தப்பியோடி விடுவீர்கள்’’ - கைதான நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு; சிறையில் அடைக்க உத்தரவு

லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் அணுகிய நிலையில், தப்பி ஓடிவிட வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரை மார்ச் 29ம்-ம் தேதி சிறையில் அடைக்கவும் லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கிலும் வைர வியாபாரி நீரவ் மோடி சிக்கியுள்ளார். தற்போது லண்டனில் வாழும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்திடம் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதற்கிடையே லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு வெளிட்ட செய்தியில், லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில்  ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி வசிப்பதாக செய்தி வெளியானது. மேலும், அந்த நாளேட்டின் நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் நீரவ் மோடி சென்றார்.

இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, அவரை கைது செய்ய லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்தநிலையில் நீரவ்மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கூறுகையில் ‘‘13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு சம்பந்தப்பட்ட நீரவ் மோடியை வெளியே விட முடியாது. அவ்வாறு ஜாமீனில் விடுவித்தால் நீங்கள் தப்பியோடி விடுவீர்கள்.

மீண்டும் சரண்டர் ஆக வாய்ப்பில்லை. எனவே அவரை மார்ச் 29-ம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது’’ எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீரவ் மோடிக்கு சொந்தமான 58 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியங்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விற்பனை செய்ய அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டனுக்கு அவசரமாக விரைந்துள்ளனர். நீரவ் மோடியை அழைத்து வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை லண்டனில் இவர்கள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x