Last Updated : 25 Mar, 2019 10:29 AM

 

Published : 25 Mar 2019 10:29 AM
Last Updated : 25 Mar 2019 10:29 AM

மோடிக்கு வாக்கு கேட்டால் கன்னத்தில் அறை, பல் உடையும்: கர்நாடக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்குக் கேட்பவர்களை கன்னத்தில் அறையுங்கள், மோடி என்று கோஷமிடுபவர்களின் பல்லை உடையுங்கள் என்று கர்நாடக  மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ  சிவலிங்கா கவுடா, ஹசன் நகர் அருகே இருக்கும் அரசிக்ரே பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், " 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவேன். 

ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று மோடி உறுதியளித்திருந்தார். இந்த  5 ஆண்டுகளில் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பாஜகவினரிடம் எப்போது ரூ.15 லட்சத்தை கொடுப்பீர்கள் என்று கேளுங்கள்.

இந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக யாரேனும் பிரச்சாரம் செய்து உங்களிடம் வாக்குகேட்டு வந்தால், அவர்களின் கன்னித்தில் அறையுங்கள், மோடி வாழ்க என்று யாரேனும் கோஷமிட்டால், அவர்களை வாயையும், பல்லையும் உடையுங்கள் " எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலாபுர்கி தொகுதியிலும், ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணாவும், பாஜக சார்பில் ஏ.மஞ்சுவும் போட்டியிடுகின்றனர். மாண்டியா தொகுதியில் மறைந்த கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x