Published : 20 Mar 2019 12:35 PM
Last Updated : 20 Mar 2019 12:35 PM

வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள்: ட்ரம்ப் எச்சரிக்கை

வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பிரேசில்  அதிபர் ஜெயிர் போல்சன்னாரோவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பங்கேற்றார். இதில் ட்ரம்ப் பேசும்போது, ''வெனிசுலாவில் நடப்பதைப் பார்க்கும்போது அங்கு ஏதோ மோசமாக நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது. 

நாங்கள் இதற்கு முடிவு கட்ட வேண்டும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க விதிக்கும்'' என்றார்.

மேலும் இரண்டு தலைவர்களும், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர், கைடோவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில் வெனிசுலா அரசு, ட்ரம்ப் மற்றும்  ஜெயிர்  போல்சன்னாரோவின் அறிக்கையை நிராகரித்துள்ளது.

முன்னதாக, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா திண்டாடி வருவதாக அந்நாட்டு அதிபர் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ட்ரம்ப் தலைமையிலான அரசை வெனிசுலா அதிபர் மதுரோ தீவிரவாதக் குழு என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x