Published : 25 Mar 2019 03:59 PM
Last Updated : 25 Mar 2019 03:59 PM

மதம் மாற்றம் செய்து கட்டாயத் திருமணம்: பாகிஸ்தானில் நீதிமன்றத்தை நாடிய இந்து சிறுமிகள்

பாகிஸ்தானில் மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ரவீனா (13) ரீணா (15) என்ற இரு சிறுமிகள் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கடந்த வார, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் மாலை வேளையில், பாகிஸ்தானில் ரவீனா (13) ரீணா (15) ஆகிய இரு டீன் ஏஜ் பெண்களைக் கடத்தி மதம் மாற்றி அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அச்சிறுமிகளின் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அவர்களை கடத்திச் சென்றது. பின்னர் அவ்விரு சிறுமிகளுக்கும் ஒரு முஸ்லிம் மதகுரு நிக்காஹ் எனப்படும் திருமணச் சடங்கை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு அந்த வீடியோவை இணைத்து இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் இம்ரான் கான் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆணை பிறப்பித்ததோடு, உடனடியாக அச்சிறுமிகளை விடுவித்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இரு இந்து சிறுமிகளும் பாதுகாப்பு  வேண்டி நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகவும் மேலும் சிறுமிகளைத் திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 75 லட்சம் இந்து மக்கள் வசிக்கிறார்கள். இதில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒவ்வொரு மாதமும் 25 கட்டாயத் திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x