

அமேசான் மற்றும் வால்மார்ட் ஆதரவுடன் செயல்படும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் போக்குகளைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கொண்டு வந்த புதிய மின் வர்த்தக விதிமுறைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவுக்குள் வரியின்றி நுழையும் 5.6 பில்லியன் டாலர்கள் பெறுமான இந்திய ஏற்றுமதிகளுக்கு கிடுக்கிப் பிடி போட்டு இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் வர்த்தக சிறப்புரிமைகளை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்து எழுதிய கடிதத்தில், ''நான் ஏன் இந்த நடவடிக்கையை எடுக்கிறேன் என்றால் இந்திய அரசுடன் அமெரிக்க அரசு மிக ஆழமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய சந்தைகளில் அமெரிக்கப் பொருட்கள் தங்கு தடையின்றி நுழைவதற்கான அனுமதிகளைக் கோரிய பின்பும் இந்தியா எந்த வித உத்தரவாதங்களையும் அளிக்கவில்லை'' என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் ‘பொதுப்படையான முன்னுரிமைகள்/சிறப்புரிமைகள் திட்டம்’ உள்ளது. அதில் இந்தியா உள்ளது. இதிலிருந்து இந்தியாவை அகற்ற அமெரிக்க அதிபர் தற்போது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017-ல் இந்தியாவுடனான அமெரிக்காவின் சரக்கு மற்றும் சேவை வர்த்தகப் பற்றாக்குறை 27.3 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொதுப்படையான சிறப்புரிமைகள் கீழ் இந்தியா நிறைய பயனடைந்து வருகிறது. தற்போது இதிலிருந்து இந்தியாவை ட்ரம்ப் நிர்வாகம் நீக்கி விட்டால் இது ஒரு பெரிய தண்டனைதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.