Last Updated : 23 Mar, 2019 12:21 PM

 

Published : 23 Mar 2019 12:21 PM
Last Updated : 23 Mar 2019 12:21 PM

சீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி

சீனாவில் சாங்டே நகரம் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலியாகியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:

மத்திய சீனாவில் உள்ள ஹூனன் மாகாண நெடுஞ்சாலை ஒன்றில் சுற்றுலாப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சாங்டே நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென நேற்றிரவு 7.00 மணியளவில் பேருந்தில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. அவற்றை அணைக்க முற்படுவதற்கு முன்பே குபீரென தீப் பரவத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் முழுப் பேருந்தும் எரிந்து சாம்பலாகியது. இப்பேருந்தில் இரு ஓட்டுநர்கள், ஒரு சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 56 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

தீ விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்ற நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஐவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததாக சீனா வைப்போ எனப்படும் காங்டே நகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உயரதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் போக்குவரத்து விபத்துக்கள் மிகச் சாதாரணமாக காணப்படும் ஒன்று ஆகும். அங்கு போக்குவரத்து அதிகாரிகள், மக்களிடையே பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். சாலை விபத்தில் மட்டும் இங்கு நாள் ஒன்றுக்கு 64 பேர் உயிரிழக்கின்றனர். நாட்டில் கடந்த 2015லிருந்து மட்டும் 58 பேர் சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x