Last Updated : 19 Sep, 2014 03:49 PM

 

Published : 19 Sep 2014 03:49 PM
Last Updated : 19 Sep 2014 03:49 PM

மும்பை தாக்குதல் பாணியில் ஆஸி. நாடாளுமன்றத்துக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

மும்பை பயங்கரவாத தாக்குதல் பாணியில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சுறுத்தல் இருந்ததாகவும், அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கியத் தலைவர்களை குறிவைக்கும் வகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டம் தீட்டியிருக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலிய அரசை அந்நாட்டு உளவுத் துறை உஷார்படுத்தியது.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பாணியை ஐ.எஸ்.ஐ.எஸ். பின்பற்ற முடிவு செய்திருந்ததாக ஆஸ்திரேலிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், முக்கியச் சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விமான நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், "நாடாளுமன்றம் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து பக்கங்களிலும் வளாகத்தின் உள்ளேயும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நமது நாடாளுமன்றத்துக்கு வந்த மிரட்டலை அடுத்து, அனைத்து வகையிலும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்புக்கே இங்கு முதல் உரிமை. எனது பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. இவை அனைத்துமே மக்களுக்காக" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x