ஆப்கானில் காவல்துறையினரின் உறவினர்கள் 12 பேரின் தலை துண்டிப்பு

ஆப்கானில் காவல்துறையினரின் உறவினர்கள் 12 பேரின் தலை துண்டிப்பு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளின் உறவினர்கள் 12 பேரின் தலை துண்டிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசம் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் அர்ஜிஸ்தான் மாவட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்த உள்ளூர் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் உறவினர்கள் 12 பேரின் தலையை பயங்கரவாதிகள் துண்டித்துள்ளனர்.

இது குறித்து அம்மாகாண துணை நிலை காவல் அதிகாரி அசாதுல்லா என்சாஃபி கூறும்போது, " வியாழன் இரவு எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது வெடிகுண்டு நிறப்பிய காரை ஓட்டிவந்த பயங்கரவாதிகள் அதனை வெடிக்க செய்தனர்.

தொடர்ந்து அருகே இருந்த சில முகாம்களை கைப்பற்றிய தாலிபான்கள், அதிகாரிகளின் உறவினர்கள் 12 பேரின் தலையை துண்டித்தனர்.

மேலும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்குதலில் எரிந்து நாசமாகி உள்ளன. அருகாமையில் உள்ள பல இடங்களில் கண்ணி வெடிகளை அவர்கள் புதைத்துள்ளதால், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறித்தும் குறிப்பிட முடியவில்லை" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in