இலக்கியக் கூட்டத்தில் சர்ச்சைக் கருத்து: இராக் நாவலாசிரியர் சுட்டுக்கொலை
இலக்கியக் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய நாவலாசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இராக்கில் நேற்று முன்தினம் நடைபெற்றதுள்ளது.
தெற்கு இராக்கைச் சேர்ந்த கர்பலாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அங்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நாவலாசிரியர் அல்லா மஸ்ஸூப், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.
பின்னர், அடையாளம் தெரியாத நபர்களால் அன்று இரவு (சனிக்கிழமை) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து கர்பலா நகர எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நவ்ஃபால் அல் ஹமாதானி தெரிவிக்கையில், ''அல்லா மஸ்ஸூப் சுடப்பட்ட நிலையில் சக ஊழியர்களால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உடலில் அதிக அளவில் துப்பாக்கி குண்டுகள் துளையிட்டிருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்பே இறந்துவிட்டார் என்றார்.
நாவலாசிரியர் அல்லா மஸ்ஸூப் இதுவரை 20 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் கர்பலா நகர வரலாறு அதன் கலாச்சாரத்தைப் பற்றியும் ஈராக்கில் ஒருகாலத்தில் செல்வாக்கோடு யூத மக்கள் வாழ்ந்தது பற்றியும் அவர் எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இராக்கில் கடந்த ஆண்டு மட்டும் ஏராளமான அரசியல் காரணங்களால் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக வெளிப்படையான அரசியல் விமர்சனம் செய்பவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது கொலைத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
