Published : 02 Feb 2019 12:11 PM
Last Updated : 02 Feb 2019 12:11 PM

விசா மோசடி செய்யும் மாணவர்களைக் கண்டறிய போலி பல்கலைக்கழகத்தை உருவாக்கிய ட்ரம்ப்: 129 இந்தியர்கள் கைது

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகக் கூறி, விசாவை நீட்டிக்க முயற்சித்த 130 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 129 பேர் இந்தியர்கள்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிப்பதாகக் கூறி, ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். அவர்களைக் கண்டுபிடிக்க ட்ரம்ப் நிர்வாகம் நூதன நடவடிக்கையை மேற்கொண்டது.

இதற்காக ஹோம்லாந்து காவல்துறை மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் போலியான கல்வி நிறுவனத்தை உருவாக்கியது. இதில் வழக்கமான பாடத் திட்டங்களோ, வகுப்புகளோ இருக்காது. மாணவர்களும் படிக்கமாட்டார்கள்.

இதுகுறித்து அறிந்துகொண்டே, இதில் சேர 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் எஃப் 1 விசாவை நீட்டித்து அமெரிக்காவிலேயே  தங்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

இவர்களில் 130 பேரை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத் துறை நேற்று காலை (வெள்ளிக்கிழமை) கைது செய்தது. இதில் 129 பேர் இந்தியர்கள். மற்றொருவர் பாலஸ்தீனியர். இவர்கள் அனைவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாகக் கடந்த வாரத்தில். விசா மோசடி செய்ததாகக் கூறி, இந்தியக் குடிமக்கள் 8 பேர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டனர். சில இந்திய மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். மிச்சிகன் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் மேத்யூ ஸ்னைடர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விசாவை நீட்டிக்க முயற்சித்த 129 இந்தியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியத் தூதரகம், அமெரிக்க அரசுத் துறைகளைத் தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பான தகவல்களை அறிய உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

+1 202 322 1190

+1 202 340 2590

ஈமெயில்: cons3.washington@mea.gov.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x