Published : 11 Feb 2019 07:55 AM
Last Updated : 11 Feb 2019 07:55 AM

மோசடிக்காரர்களும் அப்பாவி மாணவர்களும்

இது ஒரு மோசடி அல்லது சதி என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை போலி யாக ஒரு பல்கலைக்கழகத்தை உரு வாக்கி, அதன் மூலம் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவின் குடி யுரிமை துறையிடம் சிக்கியிருக் கிறார்கள். மிச்சிகனில் கிரேட்டர் டெட்ராய்ட் நகரில் பார்ம்லேண்ட் யுனிவர்சிட்டி என்ற போலியான ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரில், `வகுப்புகளுக்கு செல்ல வேண்டாம்… அமெரிக்காவில் தங்குவதற்குத்தான் கல்விக் கட்டணம் செலுத்தினால் போதும்” என மோசடி விளம்பரத்தை நம்பி ஏமாந்தவர்கள் அந்த மாணவர்கள். எப்படியாவது அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் எனத் துடிக்கும் மாணவர்கள் அவர்கள். இப்படி மோசடி விளம்பரம் மூலம் மாணவர்களை ஏமாற்றுவதே சட்டப்படி குற்றம் என்கிறார்கள் அமெரிக்க சட்ட வல்லுநர்கள். இதனால், ஆலோசகர்கள், இடைத் தரகர்களிடம் பல லட்சம் ரூபாயை மாணவர்கள் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் நாடு திரும்பி விட்டனர். மேலும் சிலர் அமெரிக்க சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். நாடு கடத்தப்படும் இந்த மாணவர்கள், செய்த தவறுக்கு தண்டனையாக இனி அமெரிக்காவுக்கு வர முடியாது. இதுபோன்ற சம்பவங்களால், அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் மீது பலருக்கும் தேவையற்ற சந்தேகம் உருவாக வாய்ப்புள்ளது. அதேபோல், இந்தியாவில் செயல்படும் ஒரு சில மோசடி பேர்வழிகளால், கல்வி ஆலோசனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்களின் பெயரும் கெடுகிறது.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்கிறார்கள். சமீப காலமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிக்கப்படுவதால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா செல்ல விசா வாங்கித் தருவதாக ஏமாற்றும் புரோக்கர்களிடம் ஏமாற வேண்டாம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதையும் மீறி, சில மோசடி நிறுவனங்கள் அப்பாவி இந்திய மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன. இந்த போலி பல்கலை.யில் சேர விரும்பிய இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அங்கீகரித்துள்ள ஐ-20 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் விசா அளிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் திருட்டுத் தனமாகத் தங்க விரும்பும் மாணவர் களைப் பிடிக்க நடத்திய இந்த நாடகத்தை உண்மை போல் காட்டுவதற்காக, இதுபோன்று செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசு, அமெரிக்காவில் உள்ள தனது தூதரகங்கள் மூலம் இந்திய மாண வர்களுக்கு சட்ட உதவியும் தூதரக உதவியும் கிடைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒரு மோசடியான சதிவலையில் மாணவர்கள் சிக்கி விட்டனர். மாணவர்களும் மோசடி எண் ணத்தில் இருந்தார்களா அல்லது அந்த விஷயத்தை இடைத் தரகர்கள் மறைத்து விட்டார்களா எனத் தெரியவில்லை. விசா மோசடி குறித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆழமாகத் தெரிந்து கொண்டு விட்டது. இதன் மூலம் குடியுரிமைச் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என அரசியல் நோக்கோடு கூட செயல்பட வாய்ப்புள்ளது. உண்மையில், விசா மோசடி செய்யும் இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நல்லது.

தேசிய வெளிநாட்டு மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் புள்ளி விவரப்படி, 2017-18-ம் கல்வியாண்டில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் மூலம் 3900 கோடி அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது. 4 லட்சத்து 55 ஆயிரம் வேலைகள் இவர்கள் மூலம் உருவாகிறது. சீனா 3 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்களோடு முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா ஒரு லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களோடு இரண்டாவது இடத்திலும் தென் கொரியா, சவுதி அரேபியா, கனடா, வியட்நாம் நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய பசிபிக் நாடுகளிலும் உயர் கல்வி படிக்க இந்திய மாணவர்கள் செல்கிறார்கள். 2017-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, கடுமையான குடியுரிமை சட்டங்கள் மற்றும் ஹெச் 1 பி விசா கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்காவின் கல்வித் துறை களையிழந்து விட்டது. இந்த நிலையில் விசா மோசடியைக் கண்டுபிடிக்க நடத்தப்படும் நாடகங்கள் மூலம் அப்பாவி மாணவர்களை ஏமாற்றுவது எந்த விதத்திலும் பயன் தராது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x