Last Updated : 22 Feb, 2019 11:17 AM

 

Published : 22 Feb 2019 11:17 AM
Last Updated : 22 Feb 2019 11:17 AM

புல்வாமா தாக்குதல் கொடூரமானது; கோழைத்தனமானது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது என்று ஐ.நா.வின் வலிமையான, அதிகாரம் மிக்க அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களையும், உதவியவர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதலுக்குக் கண்டனம் விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, , ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய 5 நிரந்த உறுப்பு நாடுகளில் சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகள் இந்தக் கண்டன அறிக்கையயை வரவேற்றுள்ளன.

ஆனால், சீனா இந்த அறிக்கையை வெளியிடக் கூடாத வகையில் பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் செய்துள்ளது. ஆனால், அனைத்தையும் மீறி பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் இதற்குக் காரணம் என்பதையும் குறிப்பிட்டு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படைத் தாக்குதல் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஜம்மு காஷ்மீரில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்தியாவின் துணை ராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இது மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது.

இந்தத் தாக்குதலுக்கு துணை புரிந்தவர்கள், உதவி செய்தவர்கள், நிதியுதவி செய்தவர்கள், ஆதரவு வழங்கியவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச சட்டத்துக்கும், இந்தியாவுக்கான இந்தப் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கும் கட்டுப்பட்டு, ஒத்துழைத்து நடக்க வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் ஆழ்ந்த வேதனையையும், தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், அ ரசுக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம்.  காயம் அடைந்தவர்கள் விரைவாகக் குணமடைந்து அமைதி திரும்ப வேண்டும்.

தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அது எந்த நோக்கத்துக்காக இருந்தாலும், எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், யார் செய்தாலும் அதை ஏற்கமுடியாது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தக் கண்டன அறிக்கை ஊக்கமாக அமைந்துள்ளது.

பலமுறை மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டும் அதை சீனா தடுத்துவிட்டது. இப்போது பிரான்ஸ் கையில் எடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட இருந்த தீர்மான அறிக்கையையும் வெளியிடவிடாமல் சீனா பல்வேறு தடைகளையும், முட்டைக்கட்டைகளையும், ஆலோசனைகளையும் நடத்தி தாமதம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அனைத்தையும் தகர்த்து அறிக்கையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x